நவோதயா பள்ளி இந்தியாவில் எல்லா மாநிலத்துலயும் இருக்கு. தமிழ்நாட்டுல மட்டும் இல்ல. இது வந்தால் ஏகப்பட்ட ஏழை எளிய மாணவர்கள் பலன் பெற முடியும்...
பாண்டிசேரியில் மிக சிறப்பாக நடக்குது இந்த இலவசபள்ளி. இந்த வருடம் 100% தேர்ச்சி.
சிலர்
சிலர் நவோதயா பள்ளி தமிழகத்துக்கு வந்துடக்கூடாது தமிழ் கெட்டுப் போயிடும்னு சொல்லுறாங்க...
இப்படி சொல்பவர்களில் எத்தனை பேர் டிவி நிகழ்ச்சியில பிற மொழி இருந்தால் அதை பார்க்கவே மாட்டேன்னு சொல்றாங்க...
தமிழ் படங்களில் தமிழ் வார்த்தையை தவிர வேற எதாவது ஒரு வார்த்தை இருந்தா கூட அந்த படத்தையே நான் பார்க்க மாட்டேன்னு சொல்லுறாங்க.
தமிழ் பாட்டுல தமிழ் வார்த்தை இல்லைனா அதை கேட்கவே மாட்டோம்..ரேடியோவ ஆஃப் பண்ணிடுவோம்னு சொல்லுறாங்க.
ம்ஹீம் இதுவரை சொன்னது இல்லையே, ஏன்னா இது எல்லாம பார்க்க, கேட்க நமக்கு பிடிக்கும். இதுல எல்லாம் நம் தமிழ் பற்றை காட்டவே மாட்டோம்.
ஆனால் ஒரு ஏழைக்கு இலவச பள்ளி, நல்ல தரமான கல்வி, நல்ல பழக்க வழக்கம், உணவு, உடை கொடுக்கறேன்னு நவோதயா இயக்கம் வந்துடுச்சினா மட்டும் நம்ம தமிழ் பற்ற காட்டுறோம்... கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
நாம தான் எவ்வளவு சுயநலவாதிகள் பாருங்கள்... ஏழைகளின் வயிற்றில் அடித்து தான் நம் தமிழ் பற்றை காட்டுவோம்.
நவோதயா பள்ளி தமிழகத்துக்கு வந்து விடக் கூடாதுன்னு சொல்லுற நாம இதுவரை எத்தனை ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி கொடுத்து இருக்கோம்...
நாமும் அடுத்தவங்களுக்கு உதவி செய்ய மாட்டோம். உதவி செய்றவங்களையும் செய்ய விட மாட்டோம்.
==========================
அது பற்றிய சில கட்டுரைகள்
சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வில் நவோதயா பள்ளி 100 % தேர்ச்சி
First Published : 24 May 2011 03:26:29 AM IST
புதுச்சேரி, மே 23: புதுச்சேரி ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியில் சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது. இதில் புதுச்சேரி நவோதயா வித்யாலயா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் மொத்தம் 60 மாணவர்கள் தேர்வு எழுதி, அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 40 மாணவர்கள் 75 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
மாணவன் எஸ்.ராகுல் 478 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். எ.சுரேஷ் 461 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும், பெருமாள் 460 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடமும் பிடித்துள்ளனர். இத்தகவலை பள்ளி முதல்வர் அ.வினையத்தான் தெரிவித்துள்ளார்.
============================================
இதுவும் மத்திய அரசின் கீழ் செயல்படும் ஒரு அரசுபள்ளி தான்....அவங்களால முடியுது.... நம்ப மாநில அரசினால் முடிவதில்லை...ஏன்?
=============================================
2, நவோதயா வித்யாலயா பள்ளியே இல்லாத மாநிலம்-11-06-2009
எழுத்தின் அளவு :
நகர்ப்புற மாணவர்களைப்போல் கிராமப்புற மாணவர்களுக்கும் கல்வித்தரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டது நவோதயா வித்யாலயா திட்டம்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் இருந்தபோது, ‘நவோதயா வித்யாலயா பள்ளிகள்’ என்ற இந்த புதிய திட்டத்தைக் கொண்டு வந்தார். ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மட்டுமே இந்தப் பள்ளிகளில் நடைபெறும். தங்குமிட வசதி, உணவு, சீருடை என அனைத்தும் இலவசம். மொத்த செலவையும் மத்திய அரசே ஏற்கிறது.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இந்த பள்ளிகள் நடைபெறுகின்றன. கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள், இப்பள்ளிகளில் சேர முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆறாம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் 75 சதவீதம் கிராமப்புற ஏழை மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். 3 சதவீதம் உடல் ஊனமுற்றோருக்கும், எஞ்சிய இடங்கள் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. மூன்றில் ஒரு பங்கு, மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர்.
அகில இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு மூலம் இப்பள்ளிகளுக்கான மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். நுழைவுத்தேர்வு, அரசின் அங்கீகாரம் பெற்ற 20 மொழிகளில் நடக்கிறது. ஒன்பது மற்றும் 11ம் வகுப்புகளிலும், ‘லேட்டரல் என்ட்ரி’ மூலம் சேர முடியும். உயர் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களிடம் 200 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஏழை மாணவர்கள் தங்கள் வறுமை, சமூக பின்னடைவை புறந்தள்ளிவிட்டு உயர்ந்த கல்வியைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த உன்னத திட்டத்தில், தமிழகம் இடம்பெறவில்லை என்பது தமிழக கல்வி வரலாற்றில் கரும்புள்ளியாகவே இருந்து வருகிறது. கடந்த 1985ம் ஆண்டு நவோதயா வித்யாலயா பள்ளிகள் நாடு முழுவதும் துவக்கப்பட்டன. 24 ஆண்டுகளாகியும் தமிழகத்தில் ஒரு பள்ளி கூட திறக்கப்படவில்லை. அதற்காக எந்த முயற்சியும் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படவில்லை.
அண்டை மாநிலங்களான ஆந்திராவில் 22 நவோதயா பள்ளிகள் உள்ளன. கேரளாவில் 13, கர்நாடகாவில் 27, புதுச்சேரியில் 4, அந்தமான் நிகோபாரில் இரண்டு பள்ளிகள் உள்ளன. மொத்தமாக, நாடு முழுவதும் 551 நவோதயா பள்ளிகள் உள்ளன. இதில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கிராமப்புற மாணவ, மாணவிகள் மத்திய அரசின் இலவச கல்வியைப் பெற்று வருகின்றனர்.
ஆனால், இந்தியாவிலேயே நவோதயா பள்ளிகள் இல்லாத ஒரே மாநிலமாக தமிழகம் மட்டுமே இருந்து வருகிறது. நவோதயா பள்ளி துவக்க மத்திய அரசு விதித்துள்ள நிபந்தனை, 30 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும், 240 மாணவர்கள் படிக்க வசதியுள்ள தற்காலிக கட்டடத்தை வாடகை இல்லாமல் வழங்க வேண்டும் என்பது மட்டுமே. இந்த வசதிகளை செய்து கொடுத்தால், தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் நவோதயா பள்ளிகளை துவக்கி ஏழை, எளிய மாணவர்கள் சிறந்த கல்வியைப் பெறச் செய்ய முடியும்.
தமிழகம் சார்பில் ஒன்பது மத்திய அமைச்சர்கள் உள்ளனர். அவர்கள் தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் துவக்க, இப்போதாவது முயற்சி எடுக்க வேண்டும் என ஏழை, எளிய மாணவர்கள், பெற்றோர் விரும்புகின்றனர்.
=========================